காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணி


      
Published on: 20th April 2024 04:05 PM

காதல் மனைவியுடன் கணவர் தற்கொலை: பதற வைக்கும் பகீர் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியை சேர்த்தவர் விஜயகுமார். 27 வயதாகும் இவர் கடந்தாண்டு தனது காதலி சந்தியாவை  இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில மாதங்களில் சந்தியா கர்ப்பமாகியுள்ளார். நாளை சந்தியாவுக்கு பிரசவ வலி வரலாம் எனவும், குழந்தையும் அன்றே பிறந்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு குடும்பத்தினரும் புதுவரவை வரவேற்க ஆவலாய் இருந்துள்ளனர். ஆனால் எதிரிக்கு கூட இதுப்போன்ற நிலை வரக்கூடாது என நினைக்கும் வகையில் இந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது. 

தனியார் நிறுவனத்தில் விஜயகுமார் வேலை பார்த்து வந்த நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளார். அவர் கடன் வாங்கி பல லட்சம் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து போட்ட பணம் எல்லாவற்றையும் இழந்துள்ளார். இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். 

 

நேற்று வாக்களிக்கும் நாள் என்பதால் அலுலவகம் விடுமுறை. அதனால் இருவரும் நன்றாக தூங்குவதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் மதியம் வரை ஆனதால் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாததால், வீட்டிலிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது விஜயகுமாரும், சந்தியாவும் தங்கள் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழந்தது தான் இவர்கள் தற்கொலைக்கு காரணமா? கந்துவட்டிக்கு பணம் வாங்கினார்களா? யாராவது மிரட்டினார்களா? என பல்வேறு கோணங்களில் சிப்காட் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

குழந்தை பிறக்க இரு தினங்களே இருந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!


தொடர்புடைய செய்திகள்